

விழுப்புரம்: மலேசியாவில் படித்து வரும் மாணவர் பாரதிதாசனின் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் மலேசியாவில் தமிழக மாணவர் பாரதிதாசன் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். இவர், தனக்கு 2-ம் ஆண்டுகல்வி நிதி கிடைக்கவில்லை என்பதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகி இருப்பதாக கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நிதியை வழங்க முடியாது என்றால், முதல்வர் வெளிப்படையாக அறிவித்ததால் திமுகவும், தமிழக மக்களும் படிக்க வைப் போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதேபோல் எதிர்கட்சித் தலைவர் உதயநிதியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “மாணவர் பாரதிதாசன் நிதி விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில் திண்டிவனத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னியரசு கூறியது:அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தின் கீழ் திமுக ஆட்சியில் கடந்தாண்டு 609 மாணவர்கள் விண்ணப்பித்து, 601 பேர்தகுதி பெற்றனர். ஆனால், 181 பேர்தான் அனுப்பப்பட்டனர். இதற்காக ரூ.84 கோடி 89 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-27-ம் கல்வியாண்டில் 437 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 365 பேரை வெளிநாட்டுக்கு அனுப்பி உள்ளோம். இதற்காகரூ.131 கோடி ஒதுக்கப்பட்டது.
தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகையை ரூ.4,250-ல் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உயர்த்தவில்லை. மாணவர் பாரதிதாசன் தனது கல்வியை முழுமையாக முடித்துவர அரசு துணையாக இருக்கும்.
நிதி வரவில்லை என தெரியவந்ததும், பல்கலைகழகத் கல்வி மற்றும் வாழ்விட செலவினத்துக்கு தலா ரூ.6 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதி நிதியும் வழங்கப்படும். எந்த பதற்றமும் தேவையில்லை. இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.