

சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை கண்டறியும், பிரீத்திங் அனலைசர் கருவி போல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்துவோரையும் கண்டறிய அதிநவீன கருவி அடுத்த மாதம் முதல் தமிழக காவல் துறையில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழக அரசு போதைப் பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கத் துறை, தீவிர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்தும் வருகின்றனர். இருப்பினும் புதுப்புது வகை போதை பொருளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வலி நிவாரண மருந்து மாத்திரைகளைக் கூட போதைக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 11,205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,903 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 21,423 கிலோ கஞ்சா மற்றும், 559 கிலோ மற்ற வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2025 செப்டம்பர் வரை 9,225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,443 பேரை கைது செய்து 20,146 கிலோ கஞ்சா, 97.5 கிலோ இதரவகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுஒருபுறம் இருக்க தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை போலீஸார் கண்டறிந்து அபராதம் விதிப்பது போல், கஞ்சா மட்டுமல்லாமல் செயற்கை போதைப்பொருளை பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வகையான போதைப் பொருளை பயன்படுத்துவோரை கண்டறிய புதிதாக அதிநவீன கருவி வரும் ஜனவரி மாதம் முதல் தமிழக காவல்துறையில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது: தமிழக அரசு இந்த கருவிக்காக ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதற்கான டெண்டர் முடிந்து முதற்கட்டமாக 50 கருவிகள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தலா 2 என வழங்கப்பட உள்ளது. இந்த கருவியைக் கொண்டு ஒருவரின் உமிழ் நீரை சிறிய பைப் மூலம் எடுத்து இந்த அதிநவீன கருவியில் செலுத்திய சில விநாடிகளில் அவர் எந்த வகையான போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார் என்பது தெரியும். அதனை வைத்து அவர் யாரிடம் இருந்து அதனை வாங்கினார். அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.1,000 செலவாகும்.
இந்தத் திட்டம் நாளடைவில் தமிழகம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், வாகன சோதனையில் இந்த அதிநவீன கருவியை பயன்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். காவல்துறை நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் தங்களது பிள்ளைகளின் அன்றாட செயல்பாடுகளில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அவர்களைக் கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவித்தனர்.