

எல்.முருகன் |கோப்புப் படம்
“தமிழகத்தில் என்டிஏ ஆட்சி உறுதி செய்யப்பட்ட ஒன்று. திமுக வீட்டுக்குச் செல்வதும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் கடந்த ஜனவரி 23-ம் தேதி மதுராந்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி விட்டுச் சென்றுள்ளார். தமிழக அரசியலில் இது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து தமிழகம், புதுச்சேரிக்கு பிரதமர் வர இருக்கிறார்.
என்டிஏ கூட்டணியில் சேர்ப்பதற்காக தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த கட்சிகள் வருகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நாட்டின் வளர்ச்சிகாகவே மத்தியில் ஆளும் பாஜக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. தேர்தலுக்காக அல்ல. சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். குறிப்பாக, தமிழகத்தில் என்டிஏ ஆட்சி உறுதி செய்யப்பட்ட ஒன்று. திமுக வீட்டுக்குச் செல்வதும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
தமிழகத்தில் இண்டியா கூட்டணி இன்னும் சரியாக கூட்டணியை அமைக்கவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி, ஒரு வடிவம் பெற்று பிரம்மாண்டக் கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறது. அனைத்துத் கட்சியின் தலைவர்களும் மேடை ஏறியதை அனைவரும் பார்த்தோம். எங்கள் கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.