

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் | கோப்புப் படம்
சென்னை: நாங்குநேரி இரட்டை கொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 2 அன்று மாலை நாங்குநேரி அருகில் உள்ள தெற்கு நாங்குநேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பத்து இந்திரா நகர் காலனியில் 9 பேர் கொண்ட கும்பல் காட்டு மிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் ஜான் மார்க் (45) எனும் மாற்றுத் திறனாளி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
மேலும் டீக்கடை அருகில் நடத்திய தாக்குதலில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி (பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள்) சசிகுமார் (புளியங்குளம்), கணேசன் (வீராங்குளம்) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, கே.ஜி.பாஸ்கரன், நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் சைலஸ் அருள்ராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அக்குடும்பத்தினரின் வாழ்வாதார நிலையை அறிந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஜான் மார்க், மாற்றுத் திறனாளி. அவரது மனைவி காது கேளாதவர், வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு கன்னி மரியாள் (8ம் வகுப்பு), நவீனா (5ம் வகுப்பு) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். வயதான தாயார் உள்ளார். ஜான் மார்க் வருமானத்தை நம்பியே கஷ்ட ஜீவனம் நடத்தி வந்துள்ளனர். இவரது குடும்பத்திற்கு அரசு வேலை, அரசு வீடு, குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றை ஏற்பதோடு, அக்குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும்.
கொலை செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும். படுகாயமடைந்த நபர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன் உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி நீதி கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் இருவர் பல வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதி ரீதியிலான பிரச்சனைகள் குறித்தும், இதற்கு பின்னணியில் உள்ள சமூக விரோத சக்திகள் மீதும் உரிய விசாரணை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.