

சென்னை: முடிந்து போன திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதை விட்டு விட்டு, தேர்தல் வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தவெக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தின் அரசு அதிகாரிகள் மற்றும் விஐபி-க்கள் அனைவரும் அரசுப் பொது மருத்துவமனைகளில் நம்பிக்கை வைத்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று, கேட்டுக்கொண்டுள்ளார்.
இது வரவேற்கத்தக்கது. என்றாலும், இது, வெறும் வாய்மொழியாகவும், வேண்டுகோளாகவும் இல்லாமல், தமிழக அரசின் உத்தரவாக இருக்குமேயானால், தமிழகத்தின் மருத்துவத்துறை பெரும் ஏற்றத்தையும், புது மாற்றத்தையும் பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை.
முக்கியத் தலைவர்களான அண்ணா, காமராஜ், கக்கன், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து நலம்பெற்ற உதாரணங்கள் உண்டு. இன்றைய அரசு பொது மருத்துவமனைகளின் நிலையோ பரிதாபகரமாக இருக்கிறது. உருக்குலைந்த கட்டிடங்கள், சீரழிந்த சுகாதாரம், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை.
இவைகள்தான் இன்றைய அரசு மருத்துவமனைகளின் அவல நிலை அடையாளங்கள். கிராமப்புற பகுதிகளிலோ அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு மருத்துவமனையின் தூய்மை பணியாளர்கள் சிகிச்சை எடுக்கும் நிலை உருவாகியுள்ளன.
எனவே, நடந்து முடிந்துபோன திமுக ஆட்சியின் மீது, பழி சுமத்திக்கொண்டிருக்காமல் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
2026 சட்டப்பேரவை தேர்தலின்போது தவெக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் 7-ம் பக்கத்தில் இன்பம் என்னும் பகுதியில், தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் உயர்தரமான மருத்துவம் வழங்கப்படும்.
தவெக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான ‘மக்கள் நலன் காப்பீடு’ அட்டை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல்பரிசோதனை செய்யப்படும்.
உயர்ரக மருத்துவ மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படும். கிராமப்புறங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பரிசோதனை அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை செய்துதரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.
ஆகவே, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக முதல்வர் விஜய், மக்களிடம் அளித்த மருத்துவ வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பொது மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் அரசு மருத்துவத்துறையை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.