‘தவெகக்காரன்’ என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: ‘தவெகக்காரன்’ என்ற அடைமொழி, குற்றங்கள் செய்வதற்கான அடையாளமாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின் தொடர்ந்தும், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரை, பொதுமக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி வன்மையான கண்டனத்திற்குரியது.

அதிலும் குறிப்பாக, இந்த தொடர் பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் கூட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுவது, காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.

‘தவெகக்காரன்’ என்ற அடைமொழி, குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது?

உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரின் ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும். எனவே, இனியாவது முதல்வர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் </p></div>
உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூ. தனித்துப் போட்டியா? - மு.வீரபாண்டியன் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in