

சென்னை: பிப்ரவரி மாதத்தில் மட்டும் 248 டெண்டர்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருப்பது எப்படி சாத்தியம்? என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.
வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது?
இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு செய்யும் தந்திரமா? என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.