

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
மொழியைக் காரணம் காட்டி, தமிழக கிராமப்புற மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது.
பள்ளிகள் பெருகும்போது தான் முன்னேறும் வாய்ப்புகளும் பெருகும் எனச் சுட்டிக்காட்டி திமுக அரசின் தலையில் நறுக்கென்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது மகிழ்ச்சி.
இத்தனை ஆண்டுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த பாவத்துக்கு பிராயசித்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவையும் வழக்கம்போல் திமுக அவமதித்தாலும் பிரச்சினையில்லை. அடுத்து அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கி, கல்வித் தரம் உயர்த்தப்படும்.