

நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் யாரும் எதிர்பாராத நிகழ்வாக நடந்துவிட்டது.சுனாமியைவிட மிகப்பெரிய கோரத் தாண்டவம் இந்த வெள்ளத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் நேபாளம் சென்ற நிலையில், அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை இன்னமும் நீடித்து வருகிறது. இதில் தமிழர்கள் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மூன்று பேருந்துகளில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் கண் முன்னே இரண்டு பேருந்துகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதில் 21 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் நேரடியாகச் சென்று பார்த்து வரவேற்றோம். அவர்களது உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. பலரது பாஸ்போர்ட் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேவையான உதவிகளை செய்து வருகிறார். அந்த நாட்டு அரசுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். மூன்று விமானங்களில் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பிரதமராக ராகுல் காந்தி வர முடியாது. அந்தக் கனவு பலிக்காது என அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவருக்கு இத்தாலி நாட்டின் மீதுதான் அக்கறை அதிகம். இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு எப்போதுமே அக்கறை இருந்தது கிடையாது. அதனால் தான் சோனியா காந்தி வந்தே மாதரம் பாடல் பாடும்போது தடுத்து நிறுத்தினார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என இருந்த சட்டப்பேரவையில் இப்போது யார் யாரெல்லாமோ இருக்கிறார்கள். சட்டப்பேரவையில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேசவேண்டும். அதற்காகத்தான் சட்டப்பேரவை கூடுகிறது.
ஆனால், எதைப் பேச வேண்டுமோ அதை பேச மறுக்கிறார்கள். சாதி, மதம் குறித்து தேவையற்ற விவாதங்கள் நடக்கின்றன. தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. வாக்களித்த மக்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்த்து புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.