

சென்னை: கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை இளஞ்சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றியும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டார். இந்தச் சிறுவனுக்கு எதிரான வழக்கை இளஞ்சிறார் நீதிமன்றத்துக்கு அனுப்பாமல் மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் சேர்த்து விசாரித்த நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றம், சிறுவனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் அந்த சிறுவனை நாகப்பட்டினம் இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இல்லை எனக்கூறி அந்த சிறுவனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 17 வயது சிறுவனுக்கு எதிரான இந்த வழக்கை நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது தவறு என்றும், கடலூர் மத்திய சிறையில் அடைத்தது அதைவிட தவறு என்றும் கூறி சிறுவனின் தாயார் சவீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: கொலைக்குற்றத்தில் கைதான 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீதான வழக்கை மற்ற நபர்களுடன் சேர்த்து அமர்வு நீதிமன்றம் விசாரித்தது சட்டப்படி தவறு. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்காமல், கடலூர் சிறையில் அடைத்தது சட்டவிரோதம்.
எனவே அந்தச் சிறுவனை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மயிலாடுதுறை சிறார் நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். மேலும் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்காமல், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. கடலூர் மத்திய சிறையில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு ரூ.1 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.