

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். (உள்படம்: விஜய் வழங்கிய வெள்ளி வாள்)
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே அமைந்துள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவரான ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார். தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் இந்த கோயிலுக்கு வந்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த், இசை ஞானி இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த கோயிலுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இளையராஜா மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4.5 கோடி மதிப்பில் வைர கிரீடம், நெக்லஸ், தங்க வாள், வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கினார்.
இந்நிலையில், டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய் நேற்று காலை 12.30 மணிக்கு அங்கிருந்து விமானம் மூலம் கர்நாடகாவில் உள்ள மங்களூருவுக்கு வந்தார். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதரும், உடுப்பி மாவட்ட அரசு அதிகாரிகளும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மங்களூருவில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு காரில் சென்றார். வழிநெடுக ஆங்காங்கே விஜய்க்கு தமிழ், கன்னட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 3.30 மணி அளவில் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்குள் நுழைந்த விஜய்யை கோயில் நிர்வாகிகள் வரவேற்று, சால்வை அணிவித்தனர். கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திர அடிகா, முதல்வர் விஜய்க்காக 20 நிமிடங்கள் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கொடி மரம், நந்தி உள்ளிட்டவற்றை விஜய் தரிசனம் செய்தார். கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு நேர்த்தி கடனாக 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். கொட்டும் மழையிலும் கோயிலில் காத்திருந்த ரசிகர்களை நோக்கி விஜய் உற்சாகமாக கையசைத்தார். கோயிலுக்குள் இருந்து வெளியே சாலைக்கு செல்லும் வரை அவரே காரை ஓட்டி சென்றார்.
வழக்கமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பிற்பகல் 1.30 முதல் 3.30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். முதல்வர் விஜய் வருகையையொட்டி நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை அந்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. விஜயின் வருகையையொட்டி மங்களூரு விமான நிலையம், கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயில் உட்பட வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடையில்லா போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் கறுப்பு கொடி காட்ட முயன்றனர். மங்களூரு போலீஸார் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஸ்ரீமூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராக இருந்தார். அவர் முதல்வராக இருந்தபோது, ஸ்ரீமூகாம்பிகை அம்மனுக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்க வாளைக் காணிக்கையாக வழங்கினார். அந்த வாள் திருவிழா காலங்களில் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜிஆருக்கு பிறகு முதல்வரான அவரது மனைவி ஜானகியும் இந்த கோயிலுக்கு வந்து தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக வழங்கினார். 2004-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஸ்ரீமூகாம்பிகை அம்மனை தரிசித்து, வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். அப்போது அவர் சண்டி ஹோமம் நடத்தியதுடன், எம்ஜிஆர் வழங்கிய தங்க வாளைத் தனது கைகளில் ஏந்தி வழிபாடு செய்தார். அந்த வரிசையில் தற்போதைய முதல்வர் விஜய் வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தகக்து.
கொல்லுார் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் கடந்த 2004-ல் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதை.
உடுப்பியிலுள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயில் கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சவுபர்ணிகா நதியின் தென்புறத்திலும் எழிலுற அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே அமைந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இக்கோயில் மூலவராக விளங்கும் ஸ்ரீமூகாம்பிகை சிலையை 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவியதாக வரலாறு உள்ளது.
இந்தக் கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், தேவியின் காதுகள் விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களாக உள்ளன. சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்ததால் இங்கு ஸ்ரீமூகாம்பிகை கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.