

சென்னை: ‘நாம் கேட்ட மரியாதைதான் இதுதான். கூட்டணியில் பரஸ்பர மரியாதையே மிக முக்கியம். தமிழக முதல்வர் விஜய் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாம் கேட்ட இந்த மரியாதைதான் இது. கூட்டணியில் பரஸ்பர மரியாதையே மிக முக்கியம். தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு.
அதேபோல், எங்கள் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது கூட்டணி ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் காட்டுகிறது. இதுவே மதச்சார்பற்ற கூட்டணியின் பலம். நாளை வெற்றி நமதே’ எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் விஜய் இன்று சத்திய மூர்த்திபவனுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.