

சோழிங்கநல்லூர்: சென்னை சோழிங்கநல்லூர் மேம்பாலத்தில் நேற்று காலை சென்ற மாநகரப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து சோழிங்கநல்லூர் மேம்பாலத்தில் மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரிக்கு வழிவிடும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓரத்தில் இருந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்த 20 பயணிகளில் 5 பேருக்கு சிறிய காயங்களும், 10 பேருக்கு பதற்றம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த செம்மஞ்சேரி போலீஸார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேடவாக்கம் தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.