

சென்னை: சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் எம்எஸ்எம்இ திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சார்பில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடனும், புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் அமைக்க 25 சதவீத மானியத்துடன் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது.
இதேபோல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் எஸ்சி, எஸ்டி தனிநபர், கூட்டாண்மை நிறுவனங்கள், அந்த சமூகங்களை சார்ந்த நிறுவனங்கள், பங்குதாரர்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 35 சதவீத மானியத்துடன், அதாவது அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கூடிய வங்கிக் கடனும், கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் கைவினைஞர்களை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் அடுத்த கட்டத்துக்கு மாற்றுவதற்காக 25 சதவீத மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை வங்கிக்கடனும் அளிக்கப்படுகின்றன.
இதுதவிர தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக பெண் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களுக்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.