

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் 33 சதவீதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட பரப்பை உறுதிசெய்து, அதற்கேற்ப மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நிவாரணம் வேண்டி கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 லட்சம் ஏக்கர், தோட்டக்கலைப் பயிர்கள் 76,132 ஏக்கர் என மொத்தம் 5.66 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டது.
இதற்கு நிவாரணமாக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.289.63 கோடி ஒதுக்கி தற்போது ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு ரூ.254.38 கோடியும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு ரூ.35.25 கோடியும் நிவாரணம் வழங்கப்படும்.
இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.