

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.
சென்னை: கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பழனிசாமியுடன் சமாதானமாகினர்.
இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே வகித்த கட்சிப் பதவிகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதற்கிடையே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்நிலையில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரிடம் வழங்கினார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் பிரபாகரும் உடனே அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சட்டப்பேரவை விதி 21-ன் படி கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது பதவி விலகல் கடிதத்தை, தனது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அந்த கடிதம் பேரவை விதி 22-ன்படிமுறையாக உள்ளதால் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக பழனிசாமி நியமித்தார்.
ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தவெகவில் அவர் சேரஉள்ளதாகவும் கூறப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா மூலம், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.