

திருமாவளவன்
சென்னை: மீண்டும் மீண்டும் விஜய்யை, கைப்பாவையாக வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆளுநரும் அதற்கு ஏற்றபடி, செயல்படுதுபோல தெரிகிறது. விஜய்யை பதவியேற்க அனுமதிப்பது தான் அரசியல் சட்டப்பூர்வமான கடமை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக, அதாவது மோடி, அமித் ஷா தமிழக அரசியலுக்குள் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே விஜய்யை பதவி ஏற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அரசிலமைப்பு சட்டம் காட்டுகின்ற வழிகாட்டுதல்.
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய நிலையில், ஆளுநர் இன்னும் இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்; இதை ஏற்புடையதாக இல்லை. தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடியவர்கள் யார் யார் என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. அவருக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில் தான் அவர் நிரூபிக்க வேண்டும்.
அதற்கும் அவரை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துறது என்கின்ற ஐயம் உருவாகிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. எங்களை பொறுத்தவரை மக்கள் வழங்கிய தீர்ப்புப்படி விஜய் முதல்வராக பதவி ஏற்பது தான் சரி; அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம்.
பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் போன்ற சங்கப்பரிவார் கும்பல் அவரை கட்டுப்படுத்த முயற்சித்த போது, நாங்கள் காங்கிரஸ், இடதுசாரிகளோடும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என அவர் சொல்லி இருப்பதை நாங்கள் கன்சிடர் பண்ணுகிறோம்.
இதில் உள்ள நிறை, குறை; நல்லது கெட்டது மற்றும் எதிர்கால அரசியல் போக்குகளை நாங்கள் பரிசீலிப்போம் என சொல்லி இருக்கிறோம். இது குறித்து முடிவை நான் முன்கூட்டியே அறிவிக்க முடியாது.
அவர்களாகவே பாதுகாப்பு கொடுத்தார்கள்; பிறகு அவர்களாகவே பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இப்போது என்ன நெருக்கடியை தர முயற்சிக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் விஜய்யை, கைப்பாவையாக வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆளுநரும் அதற்கு ஏற்றபடி, செயல்படுதுபோல தெரிகிறது. விஜய்யை பதவியேற்க அனுமதிப்பது தான் அரசியல் சட்டப்பூர்வமான கடமை. விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்; பேசினார். நாங்கள் இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என அறிவித்தோம்” இவ்வாறு அவர் பேசினார்.