நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? - ஸ்டாலின் கேள்வி

நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? - ஸ்டாலின் கேள்வி
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டு சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, விவசாயிகள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.

உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.

நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன்.

அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட விவசாயிகள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா?

மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?

விவசாயிகள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி விவசாயிகள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? - ஸ்டாலின் கேள்வி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவ. 24ல் பொறுப்பேற்கிறார் சூர்ய காந்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in