

சென்னை: “சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், பிளாஸ்ட், பிளாஸ்ட் ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, வேஸ்ட், வேஸ்ட் எனச் சொல்லும்படிதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட்.
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்துக்கு தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்.
அதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்.
மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத , சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.