

சென்னை: “மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி. 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தனது மகன்களுடன் வாக்களித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழகம் முழுவதும் தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி.
234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மக்கள் பெரிய ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளனர். இங்கே வாக்களித்துவிட்டு நான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதிக்கு செல்கிறேன். விஜய பிரபாகரனும் அவர் போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்குச் செல்கிறார்.
முதல் முறை வாக்களிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் போய் ஓட்டு போடுங்கள். இதுதான் நமது ஜனநாயகம்.
அந்த ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்த உரிமையை நிச்சயம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். யாரும் வாக்களிக்காமல் இருக்க கூடாது. இளைஞர்கள்தான் நமது எதிர்காலம். எனவே உங்கள் மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். நமது கடைமையை நினைத்து அனைவரும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும்” என்றார்