

தயாமலர் ஸ்டீபன்
சென்னை: கேரளாவைப் பின்பற்றி தமிழகத்திலும் அனைத்து குடிமக்களுக்கும் பூர்வீக அட்டை அல்லது குடியிருப்போர் அட்டையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நல கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் நிருபர்களிடம் அக்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தயாமலர் ஸ்டீபன் நேற்று கூறியதாவது: இந்தியாவில் கிறிஸ்தவர் மீது திட்டமிட்ட அச்சுறுத்தல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
டிசம்பரில் நடந்த தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. எங்கள் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கேரல் பாடும் எங்கள் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களாகும்.
வாக்காளர் பட்டியலின் சிறுப்புத் தீவிர திருத்தம் என்பது சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகும். சிறுபான்மையினரை வடிகட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோட்டம் என்று அஞ்சுகிறோம்.
எங்களுக்கு மாநில அரசுகள் கேடயமாக இருக்க வேண்டும். கேரள அரசு அறிமுகப்படுத்திஉள்ள பூர்வீக அட்டை அல்லது நேட்டிவிட்டி கார்டு திட்டம்போல தமிழகத்திலும் அனைத்துக் குடிமக்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் என்ஆர்சி அல்லது சிஏஏ மூலமாக, சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிக்க முயற்சிக்கும்போது, மாநில அரசு வழங்கும் இந்த அட்டை ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் முக்கிய பாதுகாப்பாக அமையும்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தமிழக அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தொழில்நுட்பக் காரணங்களுக்காக வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நீக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழகத்துக்குள் நுழையாதபடி, தேவாலயங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.