

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்க விழா குறித்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்லூரி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.
சென்னை: ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்க விழா குறித்த மாணவர்களுக்கான பல்வகை தொழில்நுட்பக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் ஆகியோர் சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கிவைத்தனர்.
தமிழகத்தில் 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மடிக்கணினி வழங்கும் விழாவையொட்டி. ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்கிடவும், உலகளாவிய திறன்களைக் கற்றுத் தேர்ந்திடவும் வழிகாட்டும் 40 அரங்குகளுடன் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் குறித்த பல்வகைத் தொழில்நுட்பக் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதனைஅமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி. செழியன் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாநிலத்தின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு வாரியான 40 கண்காட்சி அரங்குகளில், தமிழக மாணவர்கள் உருவாக்கிய புதுமை படைப்புகள், பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ட்ரோன் தொழில்நுட்பங்கள், அவற்றைப் பரிசோதிக்கும் மையங்கள், ஆளில்லா ட்ரோன்கள், தொலை உணரி (ரிமோட் சென்சார்), வனங்களில் காட்டுயிர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பங்கள், நவீன வரைபடங்கள், திரும்பப் பெறக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னிறைவான விண்கலத் தொழில்நுட்பம், இஸ்ரோ தொழில்நுட்பத்தை உட்படுத்திய பல்வகைச் செயற்கைக்கோள் பரிசோதனை முயற்சிகள், மின் வாகனங்கள், பலூன் ராக்கெட், ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள் என பல்வேறு அறிவியல் துறைகள் சார்ந்த 40 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில், உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர், தொழில்நுட்பக் கல்லூரி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கல்லூரிக் கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.