

சென்னை: விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை அதிகாரிகள் முறையாக கண்காணி்த்து நடவடிக்கை எடுப்பதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்துக்கு செல்லும் வழியை மறித்து சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்தாண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக்கூறி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என மாநகராட்சிதரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், அரசு நிர்வாகமும் அதை கண்டுகொள்வது இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்தால் மட்டுமே அதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.