

சென்னை: “ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ - மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர்.
அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மேலூர் தொகுதியின் எம்எல்ஏவும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யாநடராஜன் என்பவர், தமிழக டிஜிபி, சிங்கப்பெண் படை அதிகாரி, மற்றும் தமிழக சைபர்க்ரைம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக அவர் விளக்க அறிக்கை ஒன்றையும் நேற்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலுதவி செய்ததாக விளக்கம்
உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டுத்தூக்கி மயக்கத்தை போக்கும் வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன்.
இதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், திமுக ஐ.டி. விங்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயல்’’ என்று கூறியுள்ளார்.