

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்.
மதுரை: மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக முதல்வருக்கும், பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வருக்கும் கண்டனம் தெரிவிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
தமிழக முதல்வர் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி தவெக, காங்கிரஸ் சார்பில் மதுரை மேலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், ‘புதிய வரலாறு படைத்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெற வாழ்த்துகள் என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் தவறை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து பின்னர் முதல்வர் பெயரை விஜய் எனத் திருத்திச் சொன்னார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை கண்டிக்கிறோம். கேரளம், புதுவை, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசிய பிறகே கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்க வேண்டும். அதேபோல், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 152 அடி வரை உயர்த்த வேண்டும்.
புதிய அணை கட்டுவது ஏற்புடையது அல்ல. கேரள முதல்வரின் கருத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விலகியுள்ளது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் பாடலுக்கு நடனம்: முன்னதாக விஜய் நடித்த திரைப்படப் பாடலான ‘வாடி.. வாடி.. வாடி.. கைப்படாத சிடி’ எனும் பாடலுக்கு தவெகவினர் நடனமாடினர். இதைப் பார்த்த அமைச்சர் விஸ்வநாதனும் மேடையிலேயே அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அமைச்சரே தவெகவினருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.