

சென்னை: ‘ஆட்டோ மீட்டர் கட்டணத்தை திருத்தியமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ லதா (கீழ்வேளூர்), “தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும், ஆனால் 20,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணபலன்கள் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி மகளிருக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணத்தை செயல்படுத்த வேண்டும்.
தனியார்மயத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தனியார் பேருந்துகள் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1977-ம் ஆண்டுக்கு பின் ஆட்டோ, டாக்ஸி மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை, அதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்.
தலைமை செயலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மீதான போலீஸாரின் கெடுபிடிகளைத் தளர்த்தவேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசும்போது, “உறுப்பினரின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, சாத்தியமானவை நிறைவேற்றப்படும்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள், பொதுமக்களுடன் எனது தலைமையில் கடந்த ஜூலை 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஆக.5-ம் தேதி மீட்டர் பொருத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும் குழு அமைக்கப்பட்டு, அக்குழு கடந்த 21-ம் தேதி முதற்கட்ட பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை திருத்தியமைக்கவும், மீட்டர்கள் பொருத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்”
என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தலைமைச் செயலகத்துக்கு ஒரே நேரத்தில் அதிக மக்கள் வருவதால் சில சலசலப்புகள் ஏற்படலாம். அதை சரி செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப நாள் முதல் கடைசி நாள் வரை பேரவை நிகழ்வுகளை நேரலை செய்துள்ள பேரவைத் தலைவரை ‘நேரலை நாயகன்’ என்றே அழைக்கலாம். செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சைகை மொழி வசதியையும் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.