

அமைச்சர் சிவசங்கர்
அரியலூர்: “தனித்து ஆட்சி என்று அறிவித்த பழனிசாமி, இரண்டே நாளில் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சரண்டர் ஆகி விட்டார்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தற்போது தனியார் ஆம்னி பேருந்துகளை விட, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு வேண்டுமானால், ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருந்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகவை அமித் ஷாவிடம் அடிமைக் கட்சியாக பழனிசாமி அடமானம் வைத்துள்ளார். தனித்து ஆட்சி என்று அறிவித்த பழனிசாமி, இரண்டே நாளில் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சரண்டர் ஆகி விட்டார். அதிமுகவை தேடி பாஜக வந்து கூட்டணி பேசிய நிலை மாறி, பாஜகவை தேடி அதிமுக சென்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலை உள்ளது.
முதற்கட்டமாக 20 டபுள் டக்கர் (மாடி) பேருந்துகள் வாங்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் விட்டுள்ளது. அது முடிந்தவுடன் முதற்கட்டமாக சென்னையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகம் பட விவகாரத்தில் திரைப்பட தணிக்கை வாரியம், மத்திய அரசின் ஆயுதங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.