

அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ‘‘தமிழகத்தில் கிராம நத்தம் காலி மனைகளில் வசிக்கும், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பட்டா வழங்கப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக் கால நிலவரி வசூல் ரத்து செய்யப்படும். நெடுஞ்சாலை அமைப்பதற்கான நிலம் எடுப்பு நடைமுறை எளிதாக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் விரைவாக வழங்கும் வகையில், விஏஓ, வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் என்ற 3 அலுவலர் படிநிலையில் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுக்கான சேவைகளைப் பெறும் வகையில், முதல் கட்டமாக சென்னையில் ரூ.1.02 கோடியில் துணை வட்டாட்சியர் தலைமையில், 12 சிறு வட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். விவசாயிகள், நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலவரி வசூல் 1436-ம் பசலி ஆண்டு (ஜூலை 1-ம் தேதி) முதல் ரத்து செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள 12,466 கிராம நிர்வாக அலுவலர்கள், 1,263 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.68.63 கோடியில் கையடக்க கணினிகள் வழங்கப்படும். கிராமநத்தம் காலி மனைகளில் வீடு கட்டி வசிக்கும் தகுதி வாய்ந்த 20 லட்சத்துக்கும் மேலான ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கணினிமயமாக்கலின் போது, ஊரக மற்றும் கிராமநத்தம் நிலப் பதிவேடுகளில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்த, சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும். நில அளவை சேவைகளை விரைவாக வழங்க, களப்பணியாளர்களுக்கு ரூ.136.68 கோடி மதிப்பில் பூகோள நிலைக்களன் (டிஜிபிஎஸ் ரோவர்ஸ்) வழங்கப்படும். தகுதி வாய்ந்த 1,500 பேருக்கு நில அளவைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் வழங்கி, நில அளவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
வருவாய்த் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்க சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும். விஏஓ அலுவலக பராமரிப்புக்காக ஒரு விஏஓவுக்கு மாதம் ரூ.12,000 வழங்கப்படும். தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்ட நெறிமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரிடர் காலங்களில் உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த பல்பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு அமைப்பு ரூ.80 கோடியில் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைகள் அமைப்பதற்குத் தேவையான நில எடுப்பு நடைமுறைகள் எளிதாக்கப்படும். இதுபோன்ற 21 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
சங்க நிர்வாகிகள் நன்றி
வருவாய் நிர்வாக அலுவலர்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்காக, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் இரா.அருள்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.குமார், கூடுதல் பொதுச் செயலாளர் என்.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.