

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கார்த்திகை தீபம் என்பது இந்தியாவில் உள்ள இந்துக்களின் பண்டிகை அல்ல. அது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் தமிழரின் பண்டிகை.
இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் கார்த்திகை தீபத்தையொட்டி திடீரென ஒரு பிரச்சினையை தற்போது ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதிகள் பவானி சுப்புராஜன், கல்யாண சுந்தரம் ஆகியோர், “எந்த இடத்தில் வழக்கமாக கார்த்திகை தீபத்தை ஏற்றிக்கொண்டு இருக்கிறோமோ அதே இடத்தில்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும்” என தீர்ப்பு வழங்கினர்.
இதைப்பற்றி தெரியாதவர்கள், புதிதாக ஒன்றை கண்டுபிடித்ததைபோல நீதிமன்றத்தை அணுகி, கார்த்திகை தீபத்தையொட்டி ஒரு இடத்தை குறிப்பிட்டு விளக்கேற்ற அனுமதி கேட்டுள்ளனர். அதற்கும் அந்த நீதிபதி அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
2014-ல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு இல்லாமல், தனி நீதிபதியை வைத்து ஒரு தீர்ப்பை வாங்கிக்கொண்டு, அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டால் எப்படி நிறைவேற்ற அனுமதிக்க முடியும்? அப்படி அனுமதித்தால் தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, 2014 தீர்ப்பின்படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.