“ரஜினியை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை” - அமைச்சர் ரகுபதி

“ரஜினியை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை” - அமைச்சர் ரகுபதி
Updated on
1 min read

சென்னை: “ரஜினிகாந்தை யாரும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிபவர்; மிரட்டலுக்கு அல்ல. அவரை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “போதைப் பொருள் நடமாட்டம் குறித்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பொய்யான புகாரை முன்வைத்து வருகிறார். போதைப் பொருள் சப்ளை செய்கிறவர்களையே தனது கட்சியில் வைத்திருந்தவர் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை. கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களும் அவரின் பேச்சை கேட்பதில்லை. கூட்டணி அமையாத விரக்தியில் பழனிசாமி இப்படி பேசியுள்ளார். கட்சித் தலைவர் (பொதுச் செயலாளர்) பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் செயல்பட்டு வருகிறார். மக்கள் எடப்பாடியை நம்ப தயாராக இல்லை. பலர் வெளியேறி விட்டனர். அதிமுக ஊசலாட்டத்தில் உள்ளது.

பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி மீது ஏன் திடீர் பாசம்? அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்த பெண்களையே காட்டிக் கொடுக்கும் வேலை நடந்தது. ஆனால் தற்போது திமுக அரசு மீதுள்ள நம்பிக்கையால், பெண்கள் துணிந்து புகார் கொடுக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பொய்யான புகார்களை கூறிவருகிறார்.

ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை யாரும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிபவர்; மிரட்டலுக்கு அல்ல. இது உங்களுக்கும் தெரியும். அவர் திமுகவுக்கு நெருங்கிய நண்பர். எங்களுக்குக்காக 1996-ல் குரல் கொடுத்தவர். அவரை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை.

மார்ச் 23-க்குள் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு நிறைவடையும். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கூட்டணி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அமைதி பூங்காவாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் திமுக ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது” என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த ரஜினிகாந்த், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

“ரஜினியை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை” - அமைச்சர் ரகுபதி
“காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்” - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in