

சென்னை: ‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’ என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
அதுவரை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. பட்ஜெட்டில் பழைய திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. தமிழகத்தில் பெரும்பாலான திட்டங்கள் கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருபவைதான்.
நீதிக்கட்சி கொண்டுவந்த உணவுத் திட்டத்தைத்தான் அடுத்தடுத்து வந்த அரசுகள் மேம்படுத்தின. தற்போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை தவெக அரசு 150 நாட்களாக உயர்த்தியுள்ளது.
இந்த பட்ஜெட் மக்களைப் பாதிக்காதபடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்துவது குறித்து விவசாயிகளிடம் முதல்வர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்.
தாலிக்குத் தங்கம், பட்டுப்புடவை போன்ற ஏழைப் பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேபோல், அரசின் திட்டங்களுக்கு சொந்த பெயர்கள் வைப்பதைவிட பொதுவான பெயர்கள் வைப்பதே எங்களின் நோக்கம். அது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து நிதிநிலைமை சரிசெய்யப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும்.
காவிரி விவகாரத்தில் எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து வருகிறோம். எந்தக் காலத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது, முதல்வர் விஜய்க்குப் பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதில் திமுக மும்முரமாக உள்ளது.
அவர்களுடன் இணைந்து அதிமுகவும் செயல்படுகிறது. இவர்களை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டிப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. மின்கட்டண அளவீடு குறித்து 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுகணக்கீடு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதில் 1,200 இடங்களில் மட்டுமே தவறான கணக்கீடு நடைபெற்றுள்ளது. மறுக்கணக்கீடு குறித்த முழுவிவரம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.