திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி முறைகேடு: வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி முறைகேடு: வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
Updated on
2 min read

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின் வருவாய், செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார். திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி அளவுக்கு முறைகேடாக மின்சாரம் கொள்முதல் நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தமிழக மின்வாரியத்தின் திட்டப் பணிகள், வருவாய், செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2001-06 வரை ரூ.59,084 கோடி வருவாய் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் ரூ.67,439 கோடி செலவு ஏற்பட்டதால் ரூ.8,355 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2006-2011 காலகட்டத்தில் ரூ.92,737 கோடி வருவாய் கிடைத்தது. ரூ.1,28,200 கோடி செலவு செய்ததால், ரூ.35,463 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

2011-16 வரையில் ரூ.1,92,971 கோடி வருவாய் கிடைத்த போதும், ரூ.2,49,332 கோடி செலவு செய்ததால் ரூ.56,361 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 காலகட்டத்தில் ரூ.3,20,140 கோடி வருவாய் கிடைத்த போதும், ரூ.78,674 கோடி செலவு செய்ததால் ரூ.58.534 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

கடந்த 2021-26 காலகட்டத்தில் ரூ.4,97,996 கோடி வருவாய் கிடைத்தபோதும் ரூ.5,32,443 கோடி செலவு செய்ததால் ரூ.34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2025-26-ல் ரூ.1,23,072 கோடி வருவாய் கிடைத்தது.

இதில் ரூ.1,24,004 கோடி செலவு செய்ததால் பற்றாக்குறை ரூ.933 கோடியாக குறைக்கப்பட்டுள் ளது. 3.16% மின்கட்டணம் உயர்த்தப்பட்டதுதான் இதற்கு காரணம். தற்போதைய நிலவரப்படி, மின்வாரியத்துக்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.

மின்வாரியத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மொத்தமாக 3,495 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தமிழகத்துக்குள் இருக்கும் சுயசார்பு மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, சோலார் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.5.29-க்கு 4,246 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பில் பிற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் ரூ.5.39-க்கு 13,566 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறிப்பாக, மத்திய தொகுப்பில் இருந்து குறுகியகால ஒப்பந்தத்தில் மின்சாரம் வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதை தடுக்க நீண்டகால ஒப்பந்தங்களுக்கு திட்டமிடப்பட் டுள்ளது. இதன்மூலம் மாதத்துக்கு ரூ.215 கோடி மிச்சமாகும்.

மின்வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் மொத்தம் 1,40,635. இதில் 74,714 பேர்தான் பணியில் உள்ளனர். 65,921 இடங்கள் காலியாக உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதால் அன்றாடப் பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இதை தடுக்க விரைவில் 15,058 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.43,855 கோடியில் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். உடன்குடி, எண்ணூர் விரிவாக்கம், உப்பூர் அனல்மின் திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ.8,076.72 கோடி நிதிதேவை.

அதேபோல், 6 இடங்களில் ரூ.4,109 கோடியில் திட்டமிடப்பட்ட நீர் மின்நிலைய கட்டுமானங்களுக்கு கூடுதலாக ரூ.825 கோடி தேவை. மின் விநியோகத்தை நிலைப்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.49,532.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் போல மின்கடத்திகள் வாங்குவதில் 9 டெண்டர்களில் ரூ.1,028 கோடி முறைகேடு கண்டறியப் பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி அளவுக்கு முறைகேடாக மின்சாரம் கொள்முதல் நடந்துள்ளது. இதையெல்லாம் விசாரணை நடத்தி கண்டுபிடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி முறைகேடு: வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 ஜூன் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in