

சென்னை: தினமும் பழைய சோறு சாப்பிட்டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். குறை பிரசவத்தை தவிர்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொடர்ந்து, கலாநிதி வீராசாமி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல் மருத்துவ பிரிவில், புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் ஜெஷ்வந்த் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பழைய சோறில் பல்வேறு சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும் நுண்சத்துக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் பழைய சோறு சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பழைய சோறு சாப்பிடுவதால் குழந்தை நன்றாக வளர்கிறது.
குறை பிரசவம், கர்ப்பகால நீரிழிவு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது. ரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. கல்லீரலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீர்ச் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது. வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற நோய்களிலிருந்து குணமாக உதவுகிறது. உடல் நலத்துக்கு பாதுகாப்பான மிகச்சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது.
பழைய சோறு தினம் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் இரா.மூர்த்தி எம்எல்ஏ, சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோதிகுமார், ஆர்எம்ஓ வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் ஜெஸ்வந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.