

அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ‘பள்ளி மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல் தவறானது’ என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘மாணவர்களுக்கு சாதி விவரம் அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு திமுக, அதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பள்ளி மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளைப் பெறும் நோக்கில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் நலன்கருதி இ-சேவை மையங்கள் மூலமாக இச்சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுசார்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் குறித்து சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான சமூகச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படும். ஆனால், மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவுக்கு உட்பட்டவையாகும். மேலும், மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ள விவரங்கள் குறித்து தற்போது துறைகளுக்கு இடையேயான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுதவிர மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி பெயர் மற்றும் ரத்த வகை போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறவும், பிற விவரங்கள் தேவைக்கேற்ப பாதுகாப்பான க்யூஆர் குறியீடு வடிவில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான அனைத்து அம்சங்களும் சம்பந்தப்பட்ட துறைகளின் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும். எனவே, சமூக விவரங்கள் மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று அவர் கூறியுள்ளார்.