

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், ரூ.12 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள், வளாகம் மற்றும் புதிய நுழைவு வாயில் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் நாராயணசாமி, பதிவாளர் மருத்துவர் சிவசங்கீதா, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை கிண்டியில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், ரூ.12 கோடி செலவில் நுழைவு வாயில், துணைவேந்தர் அறை புதுப்பிப்பது என்று பல்வேறு வகைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.