

சென்னை: சிஎம்டிஏ வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் பி.ராஜ்குமார் ஆலோசனை நடத்தினார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் ஆர்.கிர்லோஷ் குமார், சிஎம்டிஏ
உறுப்பினர்-செயலர் ராகுல் நாத், முதன்மை செயல் அலுவலர் கார்த்திகா, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் என்.ரவிக்குமார், டி.சபாபதி, பெ.கஜேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் சிஎம்டிஏ முழுமை திட்டப் பிரிவின்கீழ் (Master Plan Unit) உள்ள மூன்றாம் முழுமை திட்ட தயாரிப்பு பணிகள், நிலசேகரிப்பு வளர்ச்சித் திட்டம் – மாடம்பாக்கம், திருமழிசை மற்றும் புது நகர் மேம்பாடு திட்டங்கள் (செங்கல்பட்டு, மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம்).
பரப்பு வளர்ச்சி (Area Development Unit) பிரிவின் கீழ் உள்ள பல்வேறு சமுக உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டு நிலைகள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, சாத்தன்காடு இரும்பு, எக்கு அங்காடி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.