

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜூலை 10) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். வெளிநோயாளிகள் பதிவு செய்யும் இடம், முதல் தளத்தில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு, ஆண்கள் கழிவறையை பார்வையிட்ட அமைச்சர் அருண்ராஜ், கழிவறை சுத்தமாக இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்து பராமரிப்பு சார்ட் குறித்து கேட்டார்.
மேலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை பொறுப்பாளரிடம் விசாரணை செய்தார். மேலும் பெண்கள் கழிவறையை எம்.பி. செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.சத்யா ஆகியோர் பார்வையிட அறிவுறுத்தினார். 6-வது தளத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் பொது அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவினை பார்வையிட்டார்.
பொது அறுவை சிகிச்சை செயல் விளக்கக் கூடத்தில் இருந்த மாணவ, மாணவிகளிடம் விடுதி, மெஸ் வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஆட்சியர் சி.முத்துக்குமரன், கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.சத்யா, கல்லூரி முதல்வர் பாரதிமோகன், மருத்துவர் ராஜா, தவெக மாவட்ட செயலாளர்கள் வி.பி.மதியழகன் (மேற்கு), பாலசுப்பிரமணியன் (கிழக்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.