நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? - பேரவையில் ஆதவ் அர்ஜுனா விவரிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Updated on
1 min read

சென்னை: ‘நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன’ என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் இன்று பேசியது: “நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 27-ம் தேதி முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, டெல்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அன்றைய தினமே அமைச்சர்கள் குழு டெல்லி சென்று கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்ததுடன், மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.

28-ம் தேதி நேபாளத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவலறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களை தொடர்புகொள்ளலாம். நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புகொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p></div>
“புதுச்சேரியில் மின்துறை தனியார்மய பிரச்சினைக்கு இனி இடமில்லை” - அமைச்சர் நமச்சிவாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in