

மேட்டூர்/தருமபுரி: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து தற்போது 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக கடந்த 1-ம் தேதி முதல்வர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து இதுவரை விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்ததால் கூடுதலாக நீர் திறக்குமாறு விவசாயிகள் கோரி வந்தனர். இதனிடையே நேற்று மாலை முதல் நீர்திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 8,612 கனஅடியாக இருந்த நிலையில், மாலையில் 9,709 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 92.39 அடியாகவும், நீர் இருப்பு 55.42 டிஎம்சியாகவும் இருந்துவருகிறது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,500 கனஅடியாக பதிவான நீர்வரத்து, நேற்றும் மாற்றமின்றி 8,500 கனஅடியாகவே தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.