

மேட்டூர் அணை | கோப்புப் படம்
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 12,324 கனஅடியாகவும், நேற்று காலை 12,883 கனஅடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது.
தொடர்ந்து மாலையில் மேலும் அதிகரித்து விநாடிக்கு 13,538 கனஅடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 86.83 அடியாகவும், நீர்இருப்பு 49.09 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 13,000 கனஅடியானது.