

சென்னை: துபாய் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 284 பயணிகள், 12 ஊழியர்களுடன் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டது.
இந்த போயிங் ரக பெரிய விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
தொடர்ந்து விமானத்தை இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, இழுவை வாகனங்கள் மூலம் விமானம் இழுத்து வரப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் சென்று பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், உடனடியாக பழுது சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சொகுசு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.