

மாணிக்கம் தாகூர்
சென்னை: தொழில்நுட்பம் கோலோச்சும் இந்த டிஜிட்டல் யுகத்திலும், ஒரு தேர்வைக் கூடச் சரியாக நடத்த முடியாத மோடி அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “87 பாடப்பிரிவுகளில் அல்லும் பகலும் படித்து, தங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக வெளிப்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடும் தோல்வியடைந்த அமைப்பும் நாட்டின் லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாழாக்கியுள்ளது.
‘தேர்வுப் போராளிகள்’ என்று கவர்ச்சிகரமான வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்லும் பிரதமரே, மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் உங்கள் தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகளோடும்தான் போராட வேண்டுமா?
தவறுகள் முழுமையாக தேர்வு முகமையின் பக்கம் இருக்கும்போது, அமைப்பின் தோல்விகளுக்குத் துளியும் பொறுப்பேற்காமல் மத்திய அரசு தட்டிக்கழிப்பதும், அதற்கான அலைச்சலையும் மன உளைச்சலையும் அப்பாவி மாணவர்கள் மட்டுமே சுமப்பதும் என்ன நியாயம்?
அடிப்படை முறைகேடுகளும் குளறுபடிகளும் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலேயே அரங்கேறின. மாணவர்களின் தொடர் போராட்டங்களாலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அழுத்தத்தாலும் அவர் பதவி விலகிய பின்னரும்கூட, நாடாளுமன்றத்தில் அவரைக் கொண்டாடிப் பாராட்டியது இதே பாஜக அரசுதான். இப்போது கல்வித் துறையைப் பொறுப்பேற்றுள்ள பிரஹலாத் ஜோஷியும், பிரதமரும் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
இந்தத் தொடர் நிர்வாகத் தோல்விக்கு நீங்களும் முழுப் பொறுப்பாளி. தொழில்நுட்பம் கோலோச்சும் இந்த டிஜிட்டல் யுகத்திலும், ஒரு தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாத மோடி அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கிறது.
நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியது போல, மாணவர்களுக்கு இந்த தேசிய தேர்வு முகமை என்பது முழுமையாக நம்பகத்தன்மையை இழந்த நம்பிக்கை இல்லா முகமை. உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு அப்பாவி மாணவர்களை இன்னும் எத்தனை காலம் பலிகடா ஆக்கப் போகிறீர்கள்?” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.