மாற்றுத் திறனாளிகள் சட்டங்கள், அரசாணைகளை அரசு முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்

மாற்றுத் திறனாளிகள் சட்டங்கள், அரசாணைகளை அரசு முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: ”மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்களையும், அரசாணைகளையும் அரசு முறையாக பின்பற்ற வேண்டும். நிர்வாக காரணம் என்று கூறி புறம் தள்ள முடியாது.” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில், தென்காசி மாவட்டத்தில் டாக்டர் அருண் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி.

இவர் 2025ம் ஆண்டு செப்.24ம் தேதி அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி கால்நடை மருந்தகத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் 2026ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்று வேறொரு கால்நடை மருத்துவரை ராயகிரி கால்நடை மருந்தகத்தில் பணி நியமனம் செய்து கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டிருந்தார். இந்த பணியிட மாறுதல் உத்தரவை எதிர்த்து டாக்டர் அருண் குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்மினினி சுதீப் குமார் பிறப்பித்த உத்தரவில்: ”மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்களையும், அரசாணைகளையும் அரசு முறையாக பின்பற்ற வேண்டும். நிர்வாகக் காரணம் என்று கூறி புறம் தள்ள முடியாது. மனுதாரரின் பணியிட மாறுதல் கோரிக்கையை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், கவனக் குறைவாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு, தனது சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற தவறியுள்ளார். எனவே கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், ஆறு வாரங்களுக்குள் மனுதாரரின் பணியிட மாறுதல் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து உரிய முடிவெடுக்க” நீதிபதி உத்தரவிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் சட்டங்கள், அரசாணைகளை அரசு முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்
“காவிரி நீருக்கான உரிமை தமிழகத்துக்கே அதிகம்” - சவுமியா அன்புமணி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in