வேலை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

வேலை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்பிஎஸ்சி) தவறான அறி​விப்​பாணை​யால் வேலை இழந்த பெண்​ணுக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரைச் சேர்ந்​தவர் ராஜபிரி​யா. இவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நான் அரசு உதவி​பெறும் தனி​யார் பள்​ளி​யில் இளநிலை உதவி​யாள​ராகப் பணிபுரிந்து வந்​தேன்.

கடந்த 2022-ல் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் சார்​பில், அமைச்​சுப் பணி​யில் இளநிலை உதவி​யாளர், உதவி​யாளர்​களாக பணிபுரிந்து வருபவர்​கள், தமிழ்​நாடு தலைமை செயல​கத்​தில் உதவி பிரிவு அலு​வலர்​/உத​வி​யாளர் பணிக்கு விண்​ணப்​பிக்​கலாம் என்று அறி​விப்​பாணை வெளி​யிடப்​பட்​டது.

நான் உதவி பிரிவு அலு​வலர் பணிக்கு விண்​ணப்​பித்​தேன். பின்​னர், நீர்​வளத் துறை​யில் பணி​யில் சேர்ந்து தலை​மைச் செயல​கப் பயிற்​சிக்கு அனுப்​பப்​பட்​டேன். இந்​நிலை​யில், நான் உதவி பிரிவு அலு​வல​ராக தேர்வு செய்​யப்​பட்​டது தமிழ்​நாடு தலை​மைச் செயலக பணி விதி​களின் அடிப்​படை​யில் நடை​பெற​வில்லை என்​றும், அதனால் என் தேர்வு நிறுத்தி வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் உத்​தர​விடப்​பட்​டது.

அப்​போது என்​னிடம் விளக்​கம் கேட்​க​வில்​லை. பின்​னர், அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் இளநிலை உதவி​யாளர்​களாக பணிபுரிபவர்​கள் தமிழ்​நாடு அமைச்​சுப் பணி​யாளர்​களாக கருதப்பட மாட்​டார்​கள். அந்த அடிப்​படை​யில் என் தேர்வு ரத்து செய்​யப்​படு​கிறது என்று டிஎன்பிஎஸ்சி உத்​தர​விட்​டது.

இதை ரத்து செய்​து, என்னை நீர்​வளத் துறை​யில் உதவி பிரிவு அலு​வல​ராக பணி​யில் சேர்த்​து, அனைத்து பணப் பலன்​களை​யும் வழங்​கு​மாறு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிபதி கே.குமரேஷ்​பாபு விசா​ரித்​தார். டிஎன்பிஎஸ்சி சார்​பில், “மனு​தா​ரர் தனி​யார் பள்ளி அமைச்​சுப்பணி​யாளர். அவரை தமிழ்​நாடு அமைச்​சுப் பணி விதி​களின் அடிப்​படை​யில் அரசு ஊழிய​ராக கருத முடி​யாது. தலை​மைச் செயல​கப் பணிக்கு தமிழ்​நாடு அமைச்​சுப் பணி விதி​கள் அல்​லது தமிழ்​நாடு ஜுடிசி​யல் பணி விதி​களின் கீழ் வருபவர்​கள் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும்’’ என்று கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்பிஎஸ்சி அறி​விப்​பாணை​யில் குறை​பாடு இருந்​துள்​ளது. இந்​தக் குறை​பா​ட்டால் மனு​தா​ரர் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். இதில் மனு​தா​ரர் மீது எந்த தவறும் இல்​லை.

மனு​தா​ரர் உதவி பிரிவு அலு​வலர் பணிக்​குரிய தகுதி பெற்​றிருந்​தா​லும், தலை​மைச் செயலக பணி விதி​களைப் பூர்த்தி செய்​யாத​தால் அவரைப் பணி​யில் தொடர உத்​தர​விட முடி​யாது. இந்த வழக்​கில் மனு​தா​ரருக்கு நீதி​மன்​றம் அனு​தாபம் மட்​டுமே தெரிவிக்க முடி​யும்.

எனினும், மனு​தா​ரர் உதவி பிரிவு அலு​வலர் பணிக்​காக கல்​வித் துறை​யால் அங்​கீகரிக்​கப்​பட்ட இளநிலை உதவி​யாளர் பணி​யைத் துறந்​துள்​ளார்.

மனு​தா​ரருக்கு டிஎன்பிஎஸ்சி ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும். எதிர்​காலத்​தில் தவறாக அறி​விப்​பாணை வெளி​யிட வேண்​டாம் என்று டிஎன்பிஎஸ்சியை நீதி​மன்​றம் கேட்​டுக்​கொள்​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறியுள்​ளார்.

வேலை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியையை கொன்ற காதலன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in