

சென்னை: தவெக அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பிரிவு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம் பெறவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இடதுசாரிகளின் நிலை ஒன்றுதான்.
மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். இன்னொரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுநர் அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது.
எனவே, வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு என்று மிகச் சரியான நிலையை எடுத்து இருக்கிறோம். எங்கள் ஆதரவு அவர்களுக்கு போதும். அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்.
வெளியில் இருந்து நாங்கள் ஆதரிப்போம். சிலர் சொல்வதுபோல் நிர்பந்தம், குடைச்சல் என்பது எல்லாம் இல்லை. உழைக்கும் மக்கள் கோரிக்கையை குடைச்சல் என்று பார்த்தால் தவறு.
எப்போதும் உழைக்கும் மக்கள், ஏழை, எளிய மக்கள் பக்கம்தான் இருப்போம். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக எத்தகைய நிலை எடுப்பதாக இருந்தாலும் ஒன்றாகத்தான் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
விசிக முடிவு...
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறும்போது, “வெளியில் இருந்து ஆதரவு என்று இடதுசாரிகள்,விசிக இணைந்துதான் முடிவு எடுத்தோம். விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றால், அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இடதுசாரிகள் எடுக்கும் அதே நிலைப்பாட்டை விசிகவும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விசிகவுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அதை பயன்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தால் அது தவறு கிடையாது.
விசிக நிச்சயம் இதுபற்றி எங்களிடம் கலந்து பேசுவார்கள். அதேநேரம், அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால் நாங்கள் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்று ஏற்கனவே தெளிவாகச் சொல்லி உள்ளோம் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.