

விபத்தில் உயிரிழந்த கார்த்திகேயன், பிரேமலதா, இன்ப செல்வன்.
சென்னை: சென்னையில், உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை, அம்பத்தூர் அடுத்த ஓரகடம், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42) கார் ஓட்டுநர். இவரது மனைவி பிரேமலதா (40). இவர்களது 8 வயது மகன் இன்ப செல்வன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் கொடுங்கையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாதவரம் ஆந்திர பேருந்து நிலையம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது, பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில அரசுப் பேருந்து ஒன்று வெளியே வந்தது. அப்போது, பின்னால் வந்து கொண் டிருந்த கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர், பேருந்து வருவதைப் பார்த்து பிரேக் பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்தின் பின் பகுதியில் லேசாக மோதியதோடு, முன்னால் சென்ற கார்த்திகேயனின் பைக் மீதும் பலமாக மோதியது.
இதில் நிலைத் தடுமாறிய கார்த்திகேயன், பிரேமலதா மற்றும் சிறுவன் இன்ப செல்வன் ஆகிய மூவரும் ஒரே பக்கமாக கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியதில், மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அன்பரசன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.