லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது கலாச்சார சீர்கேடு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது கலாச்சார சீர்கேடு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
Updated on
2 min read

மதுரை: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது கலாச்சார சீர்கேடாகும். இருப்பினும் அந்த உறவு பரவலாக நடந்து கொண்டிருக்கிறது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு கொண்டு பெண்ணை ஏமாற்றியதாக மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பிரபாகரன் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய தடை விதித்து வழக்கு சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் உள்ளனர். லிவ்-இன் உறவு என்பது இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார சீர்கேடாகும். இருப்பினும் அந்த உறவு பரவலாக நடந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் தங்களை நவீனமானவர்கள் என்று கருதி லிவ்-இன் உறவுக்குள் செல்கின்றனர். ஆனால், திருமணம் வழங்கும் எந்தப் பாதுகாப்பையும் லிவ்-இன் உறவு வழங்குவதில்லை. இதை அவர்கள் உணரும்போது ​​யதார்த்தம் நெருப்பைப் போல சுடத்தொடங்குகிறது. பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். லிவ்-இன் உறவில் இருக்கும் ஆண்கள் தங்களை நவீனமானவர்களாகக் கருதுகிறார்கள்.

இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ​​ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது.

ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டை வழங்கும் போது, ​​பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவுகொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்துவிட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

திருமணம் சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண்கள் சட்ட விதிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவாக பிஎன்எஸ் பிரிவு 69 உள்ளது. இந்த வழக்கில் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு.

இருப்பினும் மனுதாரர் திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மனுதாரர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-இன் கீழ் வழக்கு பதிய வேண்டும். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது கலாச்சார சீர்கேடு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
“விக்கெட்டுகளை கைப்பற்ற ஜடேஜா முயற்சிக்க வேண்டும்” - ஜாகீர் கான், ரஹானே கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in