

ஜடேஜா
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பயனுள்ள ஆல்ரவுண்டராக இருந்தவர். தற்போது வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளார். அதனால் அணியில் அவரது இடத்தை ஜாகீர் கானும், ரஹானேவும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர்.
வெறும் ரன்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலராக மிடில் ஓவர்களில் அவர் செயல்படுவதில்லை என்ற விமர்சனங்கள் சிறிது காலமாகவே எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஆங்கில ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜாகீர் கான் கூறுகையில், “ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மாறிவிட்டது. இப்போது வெறும் ரன் கட்டுப்படுத்தும் பவுலராக மட்டுமே காலம் தள்ள முடியாது. மிடில் ஓவர்களில் ஜடேஜா ஆக்ரோஷமாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில், மிடில் ஓவர்களில்தான் ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சி செய்வார்கள். எனவே ரன்களைக் கட்டுப்படுத்தும் பணி மட்டும் போதவே போதாது. ஆக்ரோஷமாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அத்தகைய ஒரு தேவையை நோக்கி ஜடேஜா தன்னை மீண்டும் வளர்த்தெடுத்துக் கொள்வது நல்லது.” என்றார்.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டைக் கூட ஜடேஜாவால் வீழ்த்த முடியவில்லை. ஒரு போட்டியில் கூட 10 ஓவர்களை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை. வதோதராவில் 9 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார். ராஜ்கோட்டில் 8 ஓவர்களில் 44 ரன்கள். நேற்று இந்தூரில் 6 ஓவர்களில் 41 ரன்கள் என்று சொத்தையாக வீசி வருகிறார்.
இந்நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் என்ன பிரச்சினை என்று அலசிய அஜிங்கிய ரஹானே, “ஜடேஜா பந்து வீச்சு முறை பேட்டர்களுக்கு ஒரு விதத்தில் கணிக்க முடிவதாகி விட்டது. ஒரு பீல்டரை மட்டும் 30 யார்டு சர்க்கிளுக்குள் வைத்து பந்து வீசும் போது அவர் வீசும் வேகம் கணிக்க முடிகிறது. அக்சர் படேலிடம் வேரியேஷன் உண்டு, ஜடேஜாவிடம் வேரியேஷன் இல்லை. மாற்றி மாற்றி வீசக்கூடியவராக இல்லை.
அக்சர் படேல் வேகத்தைக் கூட்டிக் குறைத்து கோணத்தை மாற்றி கொஞ்சம் கடினமேற்படுத்துவார். ஜடேஜா மெக்கானிக்கலாக வீசுகிறார். ஜடேஜாவும் கோணங்களை இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும்.” என்றார் ரஹானே.