

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவரை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிட்டால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கடுமையாக விமர்சித்து புத்தகம் அச்சிடப்பட்டு, அந்த புத்தகங்களை சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் வெளியிடவுள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
அதற்கு தடை கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக புத்தகங்களை அச்சிட்ட கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தும், அச்சிடப்பட்ட புத்தகங்களை உடனடியாக பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் ஆஜரானார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் கூடுதல் அரசு ப்ளீடர் ராஜ்திலக் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ஜன.-ம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கீழைக் காற்று பதிப்பக அரங்கு உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தப் புத்தகம் இல்லை. எங்கும் வெளியிடப்படவும் இல்லை.
இதுதொடர்பாக புத்தகக் காட்சி சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பதிப்பகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பதிப்பகம் அந்த புத்தகங்களை வெளியிடவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என உறுதியளித்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள், கேலிச் சித்திரங்களும் நீக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் நீதிபதியை அவமதிக்கும் வகையிலான புத்தகங்களை புத்தகக் காட்சியிலோ மின்னணு வடிவிலோ வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.4-க்கு தள்ளி வைத்தனர்.