

சென்னை: போதைப்பொருள் கடத்தல் நபருக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டவர்கள், பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் சகோதரர் ஜான் பிரிட்டோ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இலங்கைக்கு கடல் வழியாக ரூ.250 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் வழக்கில், கோவையை சேர்ந்த ஜான் பிரிட்டோ (57) என்பவரை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தது.
இந்த ஜான்பிரிட்டோ, அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் சகோதரர் எனவும், இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர் தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.
இந்நிலையில், தனக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும், எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், தன் பெயரை போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லீமா ரோஸ் சகோதரரான கோயம்புத்தூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜான் பிரிட்டோ (59) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது: நான் கோவையில் பிளாஸ்டிக் மறு சுழற்சி வியாபாரம் செய்கிறேன். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறேன்.
எனது சகோதரி லீமா ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வேண்டுமென்று உள்நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக பல்வேறு அவதூ றான குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு, சுய ஆதாயம் அடைவதற்காக யூடியூபில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை நான் கடந்த 8-ம் தேதி பார்த்தேன்.
அந்த வீடியோவில் கூறப்படும் ஜான் பிரிட்டோ எனும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கும், எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. என்னிடம் மத்திய மாநில அரசுகளை சார்ந்த எந்த ஒரு புலனாய்வு நிறுவனமும், எந்த காலத்திலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, எந்த ஒரு விசாரணையும் செய்தது கிடையாது.
நான் அவ்வாறான குற்றச் செயல்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஈடுபட்டதும் கிடையாது. இவ்வாறு இருக்கையில் உண்மைக்கு மாறாக பொய்யாகவும், உள்நோக்கத்தோடும் வீடியோவில் என் மீது புகார் கூறப்பட்டுள்ளன.
இதனால், எனக்கும் மற்றும் என் குடும்பத்தார் நற்பெயருக்கும் மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.